வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்களினால் அறுவடை பாதிப்பு! மட்டக்களப்பு விவசாயிகள் விசனம்

 

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி, வேத்துசேனை, காக்காச்சிவட்டை, பாலயடிவட்டை, பலாச்சோலை, மண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் வயல் நிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

விவசாயிகளின் வேளாண்மை செய்கைகள் ஆரம்பத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் விவசாய நிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த வேளையில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிடுகின்றனர்.

வேளாண்மை செய்கைகள் நிலத்தில் கீழே விழுந்து, நெற்பயிர்கள் அழுகிய நிலையிலும், காட்டு வேளாண்மைகளும் அதிகரித்த நிலையில் காணப்படுவதனால் தாம் அறுவடை செய்ய முடியாத நிலையிலும் காணப்படுவதாகவும், 

அரசாங்கம் நெல்லுக்கான சரியான நிர்ணய விலையை அறிவிக்காத நிலையில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போனால் தாம் சிறுபோகம் செய்ய முடியாத நிலையும் காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு, வெல்லாவெளி, மண்டூர் கமநல சேவை பிரிவுகளில் 10000 ஏக்கருக்கு அதிகமாக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு பெரும்போக நெற்செய்கையானது வருடாவருடம் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்படுவதாகவும், இப் பிரதேசத்தில் காணப்படும் ஆற்று வண்டுகளை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஆற்று வண்டுகள், அணைக்கட்டுகள் உடைப்பெடுத்து வெள்ள நீர் வயல்களுக்குள் பரவுவதால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், 

அறுவடை காலப்பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசமும் பெரும் நெருக்கடியாக காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நட்ட ஈட்டுத்தொகையை வெகு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *