இளைய சமுதாயத்தை மாற்றியமைக்க பெற்றோர்கள் விழிக்க வேண்டும்- வடமாகாண ஆளுநர் வலியுறுத்து.

இன்றைய பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் பெற்றோர் வளர்க்கின்றனர். அதனால்தான் இன்றைய இளைய சமூகம் சுற்றியிருப்பவர்கள் கஷ்ரப்படுவதைக் கண்டும் காணாமலும் இருக்கின்றது. 

ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு முன்வராமல் இருக்கின்றது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு இவ்வாறான கல்விக்கூடங்கள் அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் திறப்பு விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, இன்று எமது சமூகத்தில் பிறருக்கு நன்மை செய்பவர்கள் அருகிவிட்டார்கள். நன்மை செய்பவர்களையும், நன்மை செய்ய வருபவர்களையும் தூற்றுபவர்கள்தான் அதிகமாகிவிட்டார்கள். தாமும் நன்மை செய்யமாட்டார்கள், நன்மை செய்யவருபவர்களையும் செய்ய விடமாட்டார்கள். இந்தப் பழக்கம் இப்போது வளர்ந்து செல்கின்றது. 

நாங்கள் ஒரு கையால் மற்றையவர்களுக்கு பலனை எதிர்பாராமல் உதவி செய்தால் எங்களுக்கு ஆயிரம் கைகள் உதவுவதற்கு தயாராக இருக்கும். அது இயற்கையானது. mதை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

இன்றைய எங்கள் இளையோர்கள் வேறு உலகத்தில் இருக்கின்றார்கள். நாங்கள் சிறுவர்களாக இருக்கின்றபோது பாடசாலை முடிவடைந்த பின்னர் நண்பர்களுடன் விளையாடுவோம். தோட்ட வேலைகளைச் செய்வோம். ஆனால் இன்றைய சிறுவர்களுக்கு பொழுதுபோக்குவதற்கு இடமும் இல்லை. அதற்கான நேரமும் இல்லை. எந்த நேரமும் தனியார் கல்வி நிலையங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய நேரத்தைக் கொடுக்க வேண்டும்.

பணத்தை சேர்ப்பதால் மகிழ்ச்சி ஒருபோதும் வராது. நாங்கள் பிறருக்கு கொடுக்கும்போது – உதவி செய்யும்போதுதான் மகிழ்ச்சி வரும். மக்களுக்கு செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவைக்கு ஒப்பானது. அதை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். அதேநேரம் இவ்வாறான கல்விக்கூடத்தை கட்டி அமைத்துக் கொடுத்த திரு. திருமதி ஜெனார்த்தனன் தம்பதிகளையும் பாராட்டுகின்றேன் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். 

இந்த நிகழ்வில் கட்டடத்தை அமைத்துக் கொடுத்த தம்பதியினரை ஆளுநர் பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *