காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் உணவகங்களில் திடீர் சோதனை

பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிரதேசத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனை செய்யும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வழங்கிய ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் காரைதீவு, நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் தலைமையிலான, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.முனவ்வர், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.இஸ்ஸடீன், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்டோர் இணைந்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் பயன்படுத்த முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன. உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.

எதிர்வரும் ரமழான் மாதம் மற்றும் சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு கல்முனை பிரதேசத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *