கலாசார பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் – வேலணை பிரதேச செயலர் சிவகரன்!

கலை கலாசார பண்பாடுகளுடன், வரலாறுகள் மாறாதிருக்க அந்த  வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த செயற்பாட்டை வலுப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு கலாமன்றங்களுக்கும் இருக்கின்றது என வேலணை பிரதேச செயலர் கைலபிள்ளை சிவகரன் தெரிவித்துள்ளார்.

வேலணை துறையூர் ஐயனார் கலாமன்றத்தின் ஒருங்கிணைப்பில் ஐயனார் சனசமூக நிலைய கலையரங்கில் நடைபெற்ற சிவராத்திரி தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எமது அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது காலத்தின் அவசியமாகும்.

அதனடிப்படையில்  தற்போதிருக்கும் எமது கலை, கலாசார பண்பாடுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும்  கருவிகளாக இளம் சமூகத்தினர் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு பொறிமுறையை வாழும் தலைமுறை உருவாக்குவதனூடாவே எமது இருப்பின் அடையாளங்களை அடுத்த சந்ததிக்கும் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய முடியும்.

இதை தீவகத்தில் குறிப்பாக வேலணை மண்ணில் துறையூர் ஐயனார் கலாமன்றம் கடந்த  நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னெடுத்து வருவது இப்பிரதேசத்தின் அடையாளங்களை மட்டுமல்லாது எமது இனத்தின் கலை கலாசார பண்பாடுகளை உறுதி செய்வதாக இருக்கின்றது.

அந்த வகையில் இந்த கலா மன்றத்துக்கு எமது வாழ்த்துக்கள். அதுமட்டுமல்லாது இந்த செயற்பாட்டை குறித்த கலாமன்றம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கான கௌரவிப்புக்களும் இளங் கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *