கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டணம்; யாழ்.மாவட்ட பதில் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் கச்சதீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என 

யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் 

ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்தபோதே மாவட்ட பதில் செயலாளர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்களால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கச்சதீவில் சமர்ப்பிப்பதன் மூலம் தமது பதிவுகளை பக்தர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்

இதேநேரம் பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டணமாக 1000 ரூபாவும், குறிகட்டுவானிலிருந்து ஒரு வழி போக்குவரத்து கட்டடணமாக 1300 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பயணம் செய்கின்ற படகுகள் பரிசோதனை செய்யப்பட இருக்கின்றது.

உணவு தங்குமிட வசதிகள் கடற்படையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவை அந்த பணிகளில் பங்களிக்கும். ஆலய சூழல் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்குரிய வேலை திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இம்முறை விசேடமாக 25 சாரணர்கள் கச்சதீவு ஆலய பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் சரியான அறிவுறுத்தலை பின்பற்றி கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்வதன் மூலம் வீணான அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

உத்தியோகபூர்வமாக நாங்கள் குறிகட்டுவானில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கான அறிவித்தலை வழங்கி இருக்கின்றோம். இருந்தாலும் சிலர் இலங்கையின் வேறு பிரதேசங்களில் இருந்து நேரடியாக வர வாய்ப்பு இருக்கிறது. 

அவர்களிடம் நாம் வினயமாக கேட்டுக்கொள்வது முறையாக அந்தந்த பகுதி பங்குகள் மூலம் அறிவுறுத்தலை வழங்கி அந்த இடத்திற்கு வரும் பொழுது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடற்படையினரால் செய்ய முடியும்.

பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என ஆயிரம் பேருமாக 9 ஆயிரம் பேர் வருகைதரவுள்ளனர்.

அந்தவகையில் குறித்த பெருந்திருவிழாவுக்கு வருகைதரவுள்ளவர்கள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி எதுவித இடையூறுகளும் இன்றி கலந்து கொள்ளவேண்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *