அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் பிரதிநிதிகள் மாறவேண்டும்: மதனவாசன் வலியுறுத்து..!

அரசாங்கத்திடம் பேரம் பேசும் சக்திகளாக தொடர்ந்தும் இருப்பதை விட தமிழ் பிரதிநிதிகள் பங்காளிகளாக  மாற வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மதனவாசன் தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

கடந்த திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

ஒரு தூர நோக்குடன் பயணிக்க வேண்டிய தேவை தமிழ் சமூகத்திற்கு தற்போது இருக்கும் காரணத்தினால் இந்த நியமனத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். 

பேரம் பேசும் சக்திகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. 

எமது கட்சி இந்த பேரம் பேசும் சக்தி எனும் விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 

மாறாக அந்த ஆட்சியின் பங்காளர்களாக தமிழ் மக்களும் இருக்க வேண்டும். 

இதன்மூலம் தமிழ் மக்கள் உரிமையோடு சேர்ந்து பயணிக்கக்கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன 2015ம் ஆண்டு அடைந்த தோல்விக்கு பின்னர் துவண்டு விடவில்லை.

மீண்டும் 2019ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களினூடாக, எழுச்சி பெற்றது. 

இப்பொழுது எமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ கட்சியைப் பொறுப்பெடுத்துள்ளார். அவரது தலைமையின் கீழ் இளைய தலைமையின் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பயணிக்க காத்திருக்கின்றனர். 

இது ஒரு தூரநோக்கு அரசியல் பயணம். எடுத்த மாத்திரத்திலேயே நாட்டின் அரசியல் போக்கினை மாற்றிவிட முடியும் என சொல்லவில்லை.நீண்ட கால அடிப்படையில், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எமது பயணம் அமையும். 

இம்முறை நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெறுவது உறுதியாகியிருக்கும் சூழலில், பெரும்பான்மையான இடங்களில் மொட்டு சின்னத்திலும், சில இடங்களில் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன. 

இம்முறை பாரிய வெற்றியினை கொண்டு வரக்கூடிய சூழ்நிலை இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் எம்மால் மாற்றங்களைக் கொண்ண்டுவர முடியும். 

சமகால அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மற்றும் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டு அவர்களை தெரிவு செய்யக்கூடிய சூழல் காலத்தில் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *