வட,கிழக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவியுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை

மாவீரர்களுடைய உறவுகளும், தமிழ் மக்களும் மாவீரர்களை விதைத்த இடத்தில் கண்ணீர் சிந்தி நினைவுகூருவதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர்துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் இக்கோரிக்கையை விசேடமாக முன்வைத்தார். 

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

இறந்தவர்களை நினைவு கூருதலென்பது அங்தந்த சமயங்களுக்கேற்ப மக்கள் செய்து வருவது வழமையாகும். 

எங்களுடைய மக்கள் வடக்கு, கிழக்கில் நினைவுநாளாக நவம்பர்-27 அன்று துயிலுமில்லங்களிலும், மே-18அன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவு கூருவார்கள். 

கடந்தவருடம் உங்களுடைய ஆட்சியில் தடைஇல்லாமல் உணர்வுபூர்வமாக நவம்பர் 27 நாளினை நிம்மதியாக நினைவு கூர்ந்தார்கள்.

துயிலுமில்லங்கள் சிலவற்றில் இராணுவத்தினர் இருக்கின்றார்கள். இராணவத்தினர் எண்ணிக்கையும் வடக்கு, கிழக்கில் அதிகமாகவும், முல்லைத்தீவில் இன்னும் அதிகமாகவும் இரண்டு மக்களுக்கு ஒருபடையினர் என்று உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். 

மக்கள் தங்களுடைய உறவுகளை எண்ணி நினைத்து, ஒருசொட்டுக்கண்ணீர் சிந்தி, தமது மனத்தை ஆறுதல் படுத்துவதற்கு, இராணுவம் அத்துமீறி கையகப்படுத்திவைத்துள்ள  முள்ளியவளை, அளம்பில், தேராவில்,ஈச்சங்குளம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கிலுள்ள இன்னும்சில துயிலுமில்லங்களையும் விடுவியுங்கள். 

வடக்கு, கிழக்கு தமிழ்மக்களின் சார்பாக இந்தக் கோரிக்கையினை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *