களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை தவிர்க்குமாறு உத்தரவு

 

வவுனியாவில் தற்போது இடம்பெற்று வரும் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை மட்டுப்படுத்துமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜேயசேகர உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா ஊடகவியலாளரின் கோரிக்கையையடுத்து நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை நெருக்கும் நிலையில் வவுனியாவில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் அதிக ஒலியுடன் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பொது மக்களிடம் இருந்து முறைப்பாடு  கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த முறைப்பாட்டை வவுனியா ஊடகவியலாளர்கள் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதனையடுத்து இரவு நேர களியாட்ட நிகழ்வுகளின் போது அதிக ஒலி எழுப்புவதை உடனடியாக நிறுத்துமாறும், நிகழ்வு நடைபெறும் இடத்திற்குள் மட்டும் ஒலியை மட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, கற்றல் செயற்பாட்டை பாதிக்காத வகையில் நிகழ்வை நடத்துமாறும் நிகழ்வுக்கான கால நீடிப்புகளை வழங்க வேண்டாம் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜய சோமமுனி அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *