அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் தெரிவிப்பு

அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை என வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். 

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சரின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் வியாழக்கிழமை (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால், அதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில், இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு சபைக்கு இந்திய அதானி தாய் நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய முதலீட்டு சபை இது குறித்து அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

எனினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பாக இலங்கையில் உள்ள அதானி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தைப் பரிசீலிக்குமாறு அந்த  நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடிதத்தை அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனால், இந்த இரண்டு வாரங்களில் எதிர்மறையான பதில் கிடைக்கப்பெற்றால் மாத்திரம் ஏனைய மாற்றீடொன்றுக்கு செல்லவேண்டிவரும். 

எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களை அரசாங்கங்களுக்கிடையில் (G2G) ஒப்பந்தங்கள் மற்றும் போட்டியான கொள்முதல் என்பன மூலம் மாத்திரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *