புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலையில் சம்பளம் கோரி இரண்டாவது நாளாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்ட  புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 83 பேருக்கு கடந்த 9 மாதங்களாக  சம்பளம் வழங்கப்படாததால் நேற்று முதல் (07)  இன்றும் (08) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த அரசாங்கத்தின் போது நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் தங்களுடைய குடும்பங்கள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வருவதாகவும் பிள்ளைகளை கற்பிப்பதற்கு கூட வசதியின்றி இருப்பதாகவும் தமது கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.

தேர்தலின் போது புதிய அரசாங்கத்திற்கு தங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படும் என்ற நோக்கில் அயராது பாடுபட்டு வாக்குகளை அள்ளி வழங்கியிருந்த போதிலும் தற்போது தாங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலையை வெளிப்படுத்துகின்றனர். 

எமது குடும்பங்கள் மற்றும் சிறார்களின் எதிர்கால நலன் கருதி எங்களுடைய சம்பளத்தை பெற்றுத் தருமாறு தாழ்மையாக கேட்டுக் கொள்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கணிய மணல் கூட்டுத் தாபனத்திற்கு வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் சுணில் ஹந்துன் நெத்தி கடந்த மாதமளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன் இது குறித்து எதிர்காலத்தில் முறையான சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *