வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது

 

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாவற்குளம் படிவம் 2 பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், இரண்டு இடத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த ஒருவரிடம் இருந்து 2 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு மான் கொம்புகளும் மீட்கப்பட்டன.

இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சட்டில் அப் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், நீதிமன்றினால் இரண்டு பிடிவிறாந்து விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

குறித்த மூவரும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு உளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்தோடு, வவுனியா- கோவில்குளம் பகுதியில் மாடு திருடிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றின் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பாவற்குளம் படிவம் 2 பகுதியைச் சேர்ந்த மேலும் இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளின் பின் உளுக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *