தமிழரசுக்கு எதிரான சிவமோகனின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு..!

தம்மைக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக இடைக்காலக் கட்டாணை ஒன்று வழங்கும்படி கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.சிவமோகன் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் தள்ளுபடி செய்தது.

எனினும், கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக சிவமோகன் தாக்கல் செய்த மூல வழக்கு தொடர்ந்தும் விசாரணையில் இருக்கும் என்பதுடன் இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையே இப்போது நிராகரிக்கப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் முதல் மூன்று எதிராளிகளான கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதுவரை காலமும் செயலாளராகக் கடமையாற்றிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி., கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் சார்பில் இவ்வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதிட்டிருந்தார்.

நான்காவது எதிராளியாக இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த சி.சிறீதரன் எம்.பி. வழக்காளியான மருத்துவர் சிவமோகனுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்து பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்காளி சார்பில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *