யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு – பெண் உட்பட நால்வர் மறியலில்!

வீடான்றில் இருந்து 95 ஆயிரம் ரூபா மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற கிராம அலுவலர் ஒருவரின் வீட்டிலேயே இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது. 

இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளின் அடிப்படையில் அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

தொடர் விசாரணைகளிலும், பாதுகாப்புக் கமராப் பதிவுகளின் அடிப்படையிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரி மாற்ற அட்டையைக் கொண்டு 20 ஆயிரம் ரூபாவை எடுத்து மதுபானம் கொள்வனவு செய்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப் பட்டபோது அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *