15 ஆண்டுகளுக்கு பின் இலக்கு வைக்கப்படும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் – கொந்தளிக்கும் மொட்டு கட்சி

வடக்கு மக்கள் யுத்தத்தை மறந்து விட்டு சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் இராணுவத்தினர் மீண்டும் இலக்கு வைக்கப்படுவது பிரச்சினைக்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் இராணுவ  தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது.

உலகில் மிகவும் பயங்கரமான அமைப்பாகவே விடுதலை புலிகள் அமைப்பு அடையாளப்படுத்தப்பட்டது. கொடிய பயங்கரவாத அமைப்பை முழுமையாக இல்லாதொழித்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இராணுவத்தின் உயர் அதிகாரிகளை ஏன் பழிவாங்க வேண்டும். எவரது நோக்கம் செயற்படுத்தப்படுகிறது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எதற்கும் மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. 

ஆகவே பிரித்தானியாவினால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் திட்டவட்டமாக குறிப்பிட வேண்டும். என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *