13வது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச வேண்டிய தேவையில்லை! சாகர காரியவசம் கருத்து

 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது என பொதுஜன பெரமுனவின்  பொதுச்செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசமுறை விஜயம் நாட்டுக்கு சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணியை போன்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு எந்தவொரு எதிர்க்கட்சியும் வீதியில் பதாதைகளுடன் போராட போவதில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஓரிரு பொதுவான விடயங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டன.

நெருக்கடியான நிலையில் இந்தியா இலங்கைக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்பதை ஒருபோதும் மறக்க முடியாது.

இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். நாட்டுக்கு சாதகமாக அமையும் ஒப்பந்தங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரந்தளித்தால் தேவையில்லாத முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply