மொட்டு கட்சியில் இணையும் முன்னாள் எம்.பிகள்..!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் 6 பேர் மொட்டு கட்சியில் மீண்டும் இணைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறங்குவதற்கு மொட்டு கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அந்த முடிவையும் மீறியே இவர்கள் ரணிலை ஆதரித்திருந்தனர்.

இவ்வாறு ஆதரித்திருந்த மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் தாய் கட்சி நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, முன்னாள் எம்.பிக்களான அகில எல்லாவல, உபுல் ராஜபக்ச உள்ளிட்டவர்களே இவ்வாறு மொட்டு கட்சியில்  மீள இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply