கிண்ணியா பாலத்தை மின்னொளியினால் அலங்கரிப்போம் – NPP வேட்பாளர் ஒலுமுதீன் இம்தியாஸ் திட்டவட்டம்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிண்ணியா பிரதேசம் பாராளுமன்ற உறுப்பினரை இழந்திருந்த போதும், அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இந்தப் பிரதேசத்துக்கு எந்தத் தடையுமின்றி கொண்டு வருகின்றோம் என தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் கிண்ணியா நகரசபை வேட்பாளர் ஒலுமுதீன் இம்தியாஸ் தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட,  ரஹ்மானியா வட்டாரத்துக்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி இன்றையதினம் முன்னெடுத்திருந்தது.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

இந்த மாவட்டத்தில், ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் பிரதி அமைச்சர் ஒருவரையும் பெற்றிருக்கின்றோம். அவர்கள் சகோதர சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கிண்ணியா பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அக்கறையோடு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி, பெறுகின்ற போது அபிவிருத்திக்கான மேலும் பல மடங்கு நிதியினை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு கிண்ணியா பிரதேச மக்கள் ஆதரவளித்ததை போன்று, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் ஆதரவளித்து, கிண்ணியா நகர சபையையும் கிண்ணியா பிரதேச சபையையும் கைப்பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

கடந்த ஆட்சிக் காலங்களில், வைத்தியசாலை அபிவிருத்தி, பிரதான வீதி அபிவிருத்தி, கடல் அரிப்பு தடுப்புச் சுவர் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை இழந்திருக்கின்றோம். 

இந்த நிலையில்,  கிண்ணியா நகர சபை தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற போது, சின்ன கிண்ணியா மற்றும் ரஹ்மானியா வட்டாரங்களை வெள்ள அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பதற்காக, முறையான வடிகால் அமைப்பு அபிவிருத்தி திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையிலே மிக நீளமானது என பெயர் பெற்று, சுற்றுலாப்  பயணிகளைக் கவர்ந்த கிண்ணியா கடல்மேல் பாலம் அனைத்து முக்கியத்துவத்தையும் இழந்து இன்று இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

இதற்கு காரணம் கிண்ணியா நகர சபையினுடைய வருமானத்தைக் கொண்டு அதற்கு ஏற்படுகின்ற மின்சார செலவை சமாளிக்க முடியாமையாகும். இந்த நிலையை மாற்றியமைக்க எங்களுடைய ஆட்சியின் போது முறையான சூரிய மின்சார திட்டமொன்றை கொண்டுவந்து கிண்ணியா பாலத்தை மின்னொளியினால் அலங்கரிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *