திசைகாட்டி தமிழ் மக்களை நாசமாக்கும்: வல்வெட்டி மண்ணில் தேசிய மக்கள் சக்தியை விரட்டுவோம்- சிவாஜிலிங்கம் அறைகூவல்..!

ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தியை தமிழர் பகுதிகளில் விரட்டுவதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்றையதினம்(07) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபைகளின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு எதிராக இனக் கலவரங்களை முன் நின்று நடாத்திய ஜே.வி.பி கும்பல் பெயரை மாற்றி தேசிய மக்கள் சக்தியாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பகுதிகளில் அதிக வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளை பெற்றது. 

தேர்தல் முடிந்து ஆறு மாதம் கடந்த நிலையில் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகளாக்கப்பட்டமையே உண்மை. 

வடக்கு கிழக்கை பிரித்தார்கள், சுனாமி அழிவின் போது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை கிடைக்க விடாமல் போராட்டங்களை நடத்தி தடுத்தவர்களும் இந்த ஜே.வி.பி அணியினர் தான். 

அது மட்டுமல்லாது சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போதும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போதும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஆயுதப் போருக்கு சிங்கள மக்களை வீடு வீடாகச் சென்று ஆள் சேர்த்து கொடுத்தவர்களும் இவர்கள் தான். 

தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழ் மக்களின் வீரம் செறிந்த வரலாற்று இடமான வல்வெட்டித் துறையை கைப்பற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியை வல்வெட்டி மண்ணிலிருந்து விராட்டிய அடிப்பதோடு மட்டுமல்லாது தமிழர் பகுதிகளில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். 

ஏனெனில் இலங்கை அரசியலில் ஆபத்தானவர்கள் ஜே.வி.பியினர் அவர்களின் கடந்த காலம் தொடர்பில் தற்போதைய தலைமுறையினர் உணர்ந்திருக்காவிட்டாலும் வரலாறுகளை புரட்டிப் பார்ப்பதன் மூலம் அவர்களின்  தமிழின கொல வெறிகளை அறிந்து கொள்ளலாம். 

 தமிழ் மக்கள் சலுகைகளுக்காக உரிமைப் போராட்டம் நடாத்தவில்லை வடக்கு கிழக்கு எமது இன விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் விதைக்கப்பட்ட பூமி .

ஆகவே, இடம்பெறவுள்ள உள்ளூராட்சி ஆட்சிமன்ற தேர்தலை எமது இனத்தின் இருப்புக்கான தேர்தலாக நினைத்து சிங்கள தேசியத்தையும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் தமிழ் கட்சிகளையும் விரட்டியடிக்க தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *