சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்து !

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இந்த மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

அதன்படி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் உரிமை இலங்கை மின்சார சபைக்கு மாற்றப்பட உள்ளது. 

இலங்கையில் உள்ள வீட்டு மற்றும் வணிக நுகர்வோருக்கு நம்பகமான மற்றும் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படுகிறது. 

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 350 மெகாவோட் சஹஸ்தனவி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த மின் உற்பத்தி நிலையம் ஆரம்பத்தில் 30 மாதங்களுக்குள் திறந்த சுழற்சி முறையில் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும். 

பின்னர் அடுத்த 12 மாதங்களில் முழுமையான ஒருங்கிணைந்த சுழற்சி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *