பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!

பணமோசடி வழக்கில் பெரு நாட்டின்  முன்னாள் ஜனாதிபதி  ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த  2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதன்போது  ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி  ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்  வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்படுகின்றது.

இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி  ஒல்லாண்டா, மற்றும்  அவரது மனைவி ஹெரேடியா (Heredia) ஆகியோர் மீது தலைநகர் லிமாவில் உள்ள நீதிமன்றில் பணமோசடி வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே 2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஒல்லாண்டா உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே அவரது மனைவி ஹெரேடியா பெருவில் உள்ள பிரேசில் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார். அங்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் இந்த தண்டனையை எதிர்த்து ஒல்லாண்டா ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்யவுள்ளனர். அந்த வழக்கில் ஹெரேடியா பிரேசிலில் இருந்து கொண்டே காணொலிக்காட்சி மூலம் ஆஜர் ஆவார் என அவரது  சட்டத்தரணி  வில்பிரடோ பெட்ராசா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *