
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ் சாரதி மீது இனந்தெரியாதவர்கள் கத்திக் குத்து நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.மைக்கல் தேவாலயத்துக்கு அருகில் நடந்துள்ளது. நீர்வேலிப் பிள்ளையார் கோயிலருகே பஸ்ஸை மறித்து ஏறிய இருவரில் ஒருவர் இறங்கிச் செல்லும்போது சாரதியின் மீது கத்திக்குத்து நடத்தியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
பருத்தித்துறை, நான்காம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜஸ்ரின்ராஜ் (வயது-45) என்பவரே படுகாயமடைந்துள்ளார். அவர் நோயாளர் காவு வண்டிமூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





