தலைக்கவசத்தினால் தாக்குதலுக்குள்ளாகி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் பயன்படுத்தப்பட்டதாக மாவதகம பொலிஸார் நடத்திய விசாரணைகள் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் அரேபொல பகுதியில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அரேபொல மற்றும் அம்பகோட்டை பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மாவதகம மற்றும் வெலகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞன் குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற நிலையில் ,கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த வழியில் அதே பாடசாலையில் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்றும், மற்றொரு வெளியாட்கள் குழுவும், தனிப்பட்ட பகை காரணமாகக் கொண்டு மாணவரை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.
இதன்போது, மாணவனின் தலையில் தாக்கியமையால் மயக்கமடைந்த மாணவன் , முதலில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், குருணாகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 07 நாட்கள் சிகிச்சைபெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று (23) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.