
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து 6 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அது தொடர்பான கதையாடல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இதுவரை பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று அறிக்கைகள் வெளிவந்துள்ள போதிலும் உண்மையான சூத்திரதாரிகள் இவர்கள்தான் என கண்டறியப்படவில்லை. இந்நிலையில்தான் முதன் முறையாக இந்தத் தாக்குதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சில சக்திகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே கூற்றை கடந்த காலங்களில் பலரும் கூறினாலும் முதன் முறையாக அதிகாரமிக்க ஜனாதிபதியிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.