ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்சாக்கள்: நாமலின் கருத்து நகைப்புக்குரியது- ஆளுந்தரப்பு சாடல்..!

ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்சாக்கள் ஊழலற்ற வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஆலோசனை கூறுவது  நகைப்புக்குரியது என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

தங்காலை பகுதியில் நேற்றையதினம்(24) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் எளிமையாக இருப்பதையும் எதிர்கட்சியினர் இன்று  விமர்சிக்கிறார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள்  மற்றும் அரசாங்கங்கள் சுகபோகமாக செயற்பட்ட காரணத்தால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது, ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையிலோ, அலரிமாளிகையிலோ வசிப்பதில்லை. ஏனெனில் இவற்றை பராமரிப்பதற்கு பல மில்லியன் ரூபா மாதாந்தம் செலவாகும். நாடு வங்குரோத்து நிலையடைந்து மக்கள் கடினமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகபோகமாக வாழவில்லை.

ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது குறித்து எமக்கு குறிப்பிடுகிறார்கள். நாமல் ராஜபக்ஷ ஊழலற்ற வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.இது நகைப்புக்குரியது. இவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

சுகபோகம் மற்றும் ஊழல் மிகுந்த அரசியல் கட்டமைப்பை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே முறையற்ற அந்த நிர்வாக கட்டமைப்பை மீண்டும் தோற்றுவிக்கமாட்டார்கள். அரச செலவுகளை குறைத்துக் கொண்டு நாட்டை நிர்வகிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *