யாழில் வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல்!

 

வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இன்றைய தினம்  காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த  தெரிவத்தாட்சி அலுவலர், 

எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள  உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தொடர்பாக தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வேறுபட்டதாக அமையும் எனவும், குறிப்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வட்டார நிலையங்களில் வாக்கெண்ணல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்,  வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகவும், வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், பெறுபேறுகளை வெளியிடும் அலுவலர்களாகவும்  நியமிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்குரிய கடமைகளை சரியான அறிவுறுத்தல்களை பின்பற்றி வினைத்திறனாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும், தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதால் சரியான முறையில் அறிவுறுத்தல்களை  தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன், தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களுக்குரிய செயற்பாடுகள்  தொடர்பாகவும் தெரிவித்து, நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். 

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள்  மற்றும் பிரதம வாக்கெண்ணும் அலுவலராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கடமைகள் தொடர்பாகவும்  உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. 

மேலும் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணல் நிலையங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரும் போக்குவரத்து ஒழுங்குகளுக்கு பொறுப் பாகவுள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. F.C . சத்தியசோதி அவர்களால தெளிவுபடுத்தப்பட்டதுடன் தேர்தல் கட்டுபாட்டுப்பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளரும் கட்டுபாட்டுப் பிரிவின்  உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. எஸ். ரமேஷ்குமார் அவர்களாலும் விளக்கமளிக்ப்பட்டது. 

இக்கலந்துரையாடலில்  வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply