2025 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்றிரவு (27) நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிக்கு எதிரான போட்டியில் க்ருணால் பாண்டியா, விராட் கோலி மற்றும் டிம் டேவிட்டின் அதிரடி ஆட்டத்தால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் ரஜத் பட்டிதர் தலைமையிலான அணியானது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற RCB அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய DC அணியானது டிரிஸ்டன் ஸ்டப்ஸின் தாமதமான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை எடுத்தது.
அவர் மொத்தமாக 18 பந்துகளை எதிர்கொண்டு 34 ஓட்டங்களை எடுத்தார்.
அவர் தவிர, கே.எல்.ராகுல் 41 ஓட்டங்களையும், அபிஷேக் போரெல் 28 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் RCB அணி சார்பில் புவனேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.
பின்னர் 163 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய RCB அணியானது ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் பட்டிதர் ஆகியோரின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்தது.
மூன்று ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், கோலி (47 பந்துகளில் 51 ஓட்டம் ) மற்றும் க்ருணால் பாண்டியா (47 பந்துகளில் 73 ஓட்டம்) ஆகியோர் சேஸிங்கிற்கு கைகோர்த்தனர்.
கோலி ஒரு முனையில் இருந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது, பாண்டியா தொடர்ச்சியாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் தனது ஆட்டத்தை அதிரடியாக்கினார்.
இதில் 12 ஆவது ஓவரில் முகேஷ் குமாரின் பந்து வீச்சில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் குல்தீப் யாதவின் பந்து வீச்சில் ஒரு அசத்தலான சிக்ஸர் ஆகியவை அடங்கும்.
கோலி 45 பந்துகளில் அரைசதம் அடித்தார், ஆனால் 18 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த போது RCB அணிக்கு 15 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அதன் பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.3 ஓவரில் RCB அணியானது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக க்ருணால் பாண்டியா தெரிவானார்.