உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள். தொடர்பாக, வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் ,
எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தொடர்பாக, தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வட்டார நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், பெறுபேறுகளை வெளியிடும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகளை சரியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வினைத்திறனாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் தேர்தல் கடமைகளில் நேர முகாமைத்துவம் மிகவும் முக்கியமானது எனவும், தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதால் சரியான முறையில் கண்காணிப்பு க்களை மேற்கொள்ளுமாறும், 05.04.2025 ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று சரியான முறையில் வாக்களிப்பு நிலையங்கள்தயார்படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன், தேர்தலில் வாக்களிப்பு வீதங்களையும் குறிப்பிட்ட நேரங்களில் உடனுக்குடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்கும் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களுக்குரிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்து, நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக வட்டாரத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பிரதம வாக்கெண்ணலுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணல் நிலையங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரும் போக்குவரத்து ஒழுங்குகளுக்கு பொறுப்பாகவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. F.C . சத்தியசோதி அவர்களால தெளிவுபடுத்தப்பட்டதுடன்,
தேர்தல் கட்டுபாட்டுப் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளரும் கட்டுபாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. எஸ். ரமேஷ்குமார் அவர்களாலும் விளக்கமளிக்ப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.