ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க சர்வதேச உதவியை நாடு கோரியுள்ளது.
அனர்த்தத்தினால் இதுவரை குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.
எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இஸ்ரேலில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு தினத்தன்று இந்த மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் தீ எரிவதையும், சுற்றியுள்ள மலை உச்சிகளில் அடர்ந்த புகை பரவுவதையும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மற்றும் படங்கள் காட்டுகின்றன.
பலர் தங்கள் வாகனங்களை கைவிட்டு தீப்பரவலிலிருந்து தப்பி ஓடுவதைக் காண முடிந்தது.
இஸ்ரேலிய ஊடகங்களின்படி, 160 க்கும் மேற்பட்ட மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
பல விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கின்றன.
மேலும் நாட்டின் இராணுவமும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன என்று அது கூறியது.
இருப்பினும், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று தீயை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.