இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வருக்கு பலரும் அஞ்சலி!

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடலுக்கு பலரும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இன்று இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறையடி சேர்ந்தார்.

குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.

புகழுடலுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று மாலை நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.எல்லா மக்களோடும் குறிப்பாக ஏனைய மத தலைவர்களுடனும் மிக ஆரோக்கியமான உறவுகளை கொண்ட சைவ சமய தலைவராக திகழ்ந்தவர்.

மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். எல்லாஆலயங்களுக்கும்  திருவிழா காலங்களில் அழைத்த போதெல்லாம் தயங்காமல் சென்று பங்கேற்று ஆசீர்வதித்தவர்.

தனது உடல் எளிமையாக தகனம் செய்யப்பட வேண்டும் என்று கூறிய மனப்பாங்கு ஆச்சரியமானதும் பெருமைக்குரியதும் ஆகும்.

தமிழ் மக்களுடைய இருப்பு மற்றும் சுயநிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை எந்த வித தயக்கமுமின்றி தன்னை சந்திக்க வருகின்ற எல்லா தென்னிலங்கை தலைவர்களிடமும் சர்வதேச பிரதிநிதிகளிடமும் தெளிவாக எடுத்துக் கூறிய பெருந்தகையாகவும் பெரும் மதத் தலைவராகவும் இவர் விளங்கினார்.

இவரது இழப்பு என்பது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான இழப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *