வவுனியா மாநகர சபையில் ஒரு வட்டாரத்திலும் வெற்றி பெறாது தோல்வியடைந்த இலங்கை தமிழரசு கட்சி

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வவுனியா மாநகர சபையில்  ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறாது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியை பின்தள்ளி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

எனினும் வடக்கின் நுழைவாயிலாக விளங்கும் வவுனியா மாநகர சபையில் கடந்த முறை தமிழரசுக் கட்சி 6 உறுப்பினர்களை கொண்டிருந்த போதும் இம்முறை ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி என்பன தலா நான்கு ஆசனங்களைப் பெற்று வட்டாரங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

இலங்க தமிழரசுக் கட்சி விகிதாசார அடிப்படையில் போனஸ் ஆசனம் மூன்றினை வவுனியா மாநகர சபையில் பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் பாரிய வெற்றியை தமிரசுக் கட்சி பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையிலும், முல்லைத்தீவில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தலைமையிலும், மன்னாரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலும், யாழ்ப்பாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலும் வெற்றிகளை பதிவு செய்த போதும் வவுனியாவில் எந்தவொரு சபையில் ஆட்சி அமைக்கக் கூடிய ஆசனங்களையோ அல்லது அதிகபட்ச ஆசனங்களையோ தமிழரசுக் கட்சி பெறவில்லை என்பதுடன், முதல் நிலையையும் பிடிக்கவில்லை.

அத்துடன், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்  வசிக்கும் மாநகர சபையில் வட்டாரங்களில் தோல்வியடைந்து போனஸ் ஆசனம் 3 ஐ மடடும் பெற்றுக் கொண்டமை வவுனியாவில் கட்சியின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துவதாக கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வன்னித் தேர்தல் தொகுதியில் உள்ள வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருந்தமை குறிபபிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *