ஹரக் கட்டா உடல்நிலை தொடர்ப்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

தங்காலை விசேட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தக விக்ரமரத்னவின் உடல்நிலை  தொடர்பில் தங்காலை சட்டவைத்திய அதிகாரி அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி பரிசோதித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்  இன்று  உத்தரவிட்டது. 

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது  இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ‘ஹரக் கட்டா’, சாட்சி கூண்டிலிருந்து, சிறிது காலமாக மூலநோய் உட்பட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் நீதி மன்றில் கூறினார். 

அதுமட்டுமன்றி தன்னைப் பார்க்க வைத்தியர் ஒருவர் வந்த போதிலும், தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தங்காலை பொறுப்பதிகாரியின் தேவைகளின் அடிப்படையில் அமைந்ததே தவிர வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில் அல்ல என்றும்  அதன்படி, தனக்கு வைத்திய சிகிச்சை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார் 

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ​​அவர் மட்டுமே வலியை உணர்கிறார்கள் என்றும்  அதன்படி, பிரதிவாதியின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார் 

மேலும் பிரதிவாதி ஹரக் கட்டா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன, தனது கட்சிக்காரர் பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

எனவே எதிர்காலத்தில் அவர் சார்பாக பிணை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதை பரிசீலிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.  அதன் பின்னர் இந்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டது. 

அத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, ​​’ஹரக் கட்டா’ என்ற பிரதிவாதி தப்பிச் செல்வதற்கு சதி செய்தல், உதவி செய்தல் உள்ளிட்ட 22 குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள், ‘ஹரக் கட்டா’ என்ற நந்துன் சிந்தக விக்ரமரத்ன உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *