கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் அநுரவின் நிர்வாகம்! மொட்டு கட்சி பகிரங்க குற்றச்சாட்டு

 

கனடாவில் வாழும் விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்   நிர்வாகம் அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கனடாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் உத்வேகமடைந்துள்ளார்கள். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கடனா சென்றிருந்த போது புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார்.

இந்த நினைவுத் தூபி திறப்பு விழாவில் கலந்துகொண்ட கனடாவின் பிரம்டன் நகர மேயர் பெற்றிக் ப்ரொய்லர் ‘தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத இலங்கையர்களை பிரம்டன் நகரம் அங்கீகரிக்காது, கனடாவும் அங்கீகரிக்காது. அவ்வாறானவர்கள் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த கூற்று மிகவும் பாரதூரமானது. தமிழ் இனப்படுகொலை என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *