ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து..!

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் நேற்றையதினம் அமைச்சுப் பொறுப்பேற்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அண்மையில் நடைபெற்று முடிந்த கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் Scarborough – Guildwood – Rouge Park தொகுதியில் அமோக வெற்றிபெற்று, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், இன்றையதினம் (நேற்று) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு, ஈழத்தமிழர்கள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் நிறைவடைகிறேன்.

அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளால் வலிந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நேரடிப் பிரதிநிதியான தாங்கள், உங்களின் தனிமனித வாழ்வில் எதிர்கொண்ட ஏராளமான தடைகளையும், சவால்களையும் உந்திக்கடந்ததன் பயன்விளைவாய், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஒருவராக, சமூகநேயம் மிக்க மக்கள் தொண்டராக இருந்து பின் அரசியல் பணியில் அடியெடுத்துவைத்து, இன்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பெருமிதத்தோடு பதவியேற்றுள்ளமை காலத்தின் பதிவே ஆகும்.

சவால்களின் எல்லைகளைக் கடந்து நிமிர்ந்தெழுந்து நிற்கும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியான தங்களை, எமது உணர்வுகளோடு நெருக்கமான, எங்களில் ஒருவராகவே எம்மால் பார்க்கமுடிகிறது. அத்தகு மனநிறைவோடு, மக்கள் பணி என்ற மகத்தான கொள்கையோடும், இலட்சியத்தோடும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியாக பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் தங்கள் இயலுமைக்கு உட்பட்ட பணிகளில் இதயசுத்தியோடு இணைந்து செயற்படுவீர்கள் என்ற பெருநம்பிக்கையோடு, உங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளைக் கூறும் அதேவேளை தங்கள் பணி சிறக்க இறை ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *