
இலங்கையில் தேடப்பட்டு தமிழகத்திற்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கையின் கொழும்பு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
கொழும்பு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தராக அர்த்த நாயக சமைந்த பிரதீப் குமார் பண்டார (வயது -32)இவர் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு குறித்த காவல் நிலையத்தில் இருந்த சுமார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மாயமான நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இலங்கை பொலிஸாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள பிரதீப்குமார் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி தனுஷ்கோடி பகுதிக்கு வந்தார்.
அவரை மெரைன் பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (10) ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவரிடம் குற்றப்பத்திரிக்கை ஆவண நகல்கள் வழங்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க நீதிபதி விஜய்ஆனந்த் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.





