ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்ட விவகாரம் – நடிகர் சூரி வேதனை

‘மாமன்’ திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மண் சோறு உண்ட  மதுரை ரசிகர்கள் குறித்து நடிகர் சூரி கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன்,கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

மூன்று திரைப் படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றிகளைக் குவித்தது. கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெற்றிகளைக் குவித்தது.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘மாமன்’ திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாற வேண்டும் என்பதற்காக  சூரியின் ரசிகர்கள் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண் சோறு  உட்கொண்டு வேண்டுதல் செய்துள்ளனர்.

அத்துடன்  சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்துள்ளனர். இந்த வேண்டுதல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த  சூரி ‘ ‘மாமன்’ படம் வெற்றி அடைய மதுரையில் மண் சோறு உண்டவர்களை  தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. இது மிகவும் முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டு விட்டு மண்சோறு உண்டால்  படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *