ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் நீதி கோரிய போராட்டம்: குவிக்கப்பட்ட பொலிஸார்..!

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் தொடக்கம்  அமைதியான வழியில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டத்தை  பொலீஸாரை கொண்டு நீதி மன்ற தடையுத்தரவு ஒன்றை பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு இங்கே பொதியிடுங்கள்,அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னாருக்கு கட்டி உப்பு கொண்டு செல்வதனை நிறுத்தி ஆனையிறவில் பொதியிடுங்கள், தொழிலாளர்களுக்கு தினமும் வேலையை  வழங்க வேண்டும், தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதனை நிறுத்த வேண்டும், உப்பள முகாமையாளரை மாற்றம் செய்ய வேண்டும்,தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்கவிடு, ரஜ உப்பு என்ற பெயரை ஆனையிறவு உப்பு என மாற்றம் செய் போன்ற கோரிக்கைகளை  முன்வைத்து  அமைதியான முறையில் பந்தல் அமைத்து  எமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை அடக்கும் வகையில் தவறான தகவல்களை பொலீஸார் ஊடாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று எமது கவனயீர்ப்பு போராட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதன் மூலம் இங்கிருந்து கட்டி உப்பை மூலப்பொருளாக அம்பாந்தோட்டை, மன்னார், மற்றும் புத்தளத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர். 

எனவே, இதனை நாம் வன்மையான கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான  முருகேசு சந்திரகுமாரும் பங்கெடுத்துள்ளார்.

அதேவேளை குறித்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *