வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இம் மழையின் போது இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவித்தார்.

அண்மித்த ஆண்டுகளில் மே மாதம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக மழை தரும் மாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 

குறிப்பாக நவம்பர் மாதத்திற்கு அடுத்து அதிக மழை கிடைக்கும் மாதமாக மே மாதம் மாறி வருகின்றது. 

கடந்த 10 ஆண்டுகளாக மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கணிசமான அளவு மழை கிடைத்து வருகின்றது. 

வடக்கு மாகாணத்தில் மே மாதத்தைப் பொறுத்தவரை 2020 ஆம் ஆண்டு  86 மி.மீ. உம், 2021ல் 117 மி.மீ.உம், 2022ல்  138 மி.மீ.உம், 2023 ல் 186 மி.மீ. உம் 2024 312 மி. மீ. உம் இவ்வாண்டு(2025) இன்று இரவு 9.00 மணி வரை 162 மி.மீ. உம் மழை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *