எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மொட்டு கட்சி தயாரில்லை! சாகர காரியவசம் அறிவிப்பு

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் கூட்டணி தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள சபைகளில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

அதில் எமது கட்சி சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டு, எமது கட்சியின் நிலைப்பாட்டை அங்கு தெரிவித்திருந்தார். 

அதன் பிரகாரம் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பொன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

அந்தக் கலந்துரையாடலில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் கூட்டணி அமைத்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம்.

கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினராகிய எங்களுக்கு என்று ஒரு கொள்கை இருக்கின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பது வேறு கொள்கைகளையுடைய கட்சிகள். அதனால் ஆட்சியமைப்பதற்கு மாத்திரம் எங்களுக்கு மத்தியில் கூட்டணி அமைக்கத் தேவைப்பாடாது.

அவ்வாறன நிலைக்குத் தள்ளப்பட கட்சி என்ற வகையில் நாங்கள் தயார் இல்லை. – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *