வவுனியா மாநகரசபையில் தோல்வியடைந்த இரு முஸ்லிம் பிரதிநிதிகளை நிறுத்த முயற்சி: தமிழ் உறுப்பினர்கள் புறக்கணிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த இரு போனஸ் ஆசனங்களையும், ஒரே வட்டாரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த இரு முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வழங்க முயற்சி எடுத்து வருவதாக கட்சியில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்கள கவலை வெளியிட்டுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சகதியில் வவுனியா மாவட்டத்தில் அதன் அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் குறித்த கட்சியில் கூட்டணி அமைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் ஆகியோர் வவுனியா மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தனர்.

இதில் வவுனியா மாநகரசபையில், ஐக்கிய சக்தியில் நேரடி வேட்பாளர்களாக தாண்டிகுளம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், குடியிருப்பு, மூன்றுமுறிப்பு, இறம்பைக்குளம், சின்னப்புதுக்குளம், கோவில்குளம் ஆகிய 8 வட்டாரங்களில் தமிழ் வேட்பாளர்களும், பட்டானிச்சி புளியங்குளம் (இரட்டை தொகுதி), கடைவீதி ஆகியவற்றில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேரடியாக அதிக தமிழ் வேட்பாளர்கள் பெற்றுக் கொடுத்த வாக்கின் அடிப்படையில் இரு போனஸ் ஆசனங்கள் வவுனியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்திருந்தது. 

குறித்த இரு போனஸ் ஆசனத்தையும் இரட்டைத் தொகுதிகளைக் கொண்ட பட்டானிச்சி, புளியங்குளம் பகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு ஐக்கிய மககள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் அக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்களின் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் உறுப்பினர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். 

இது தொடர்பில் கட்சி தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கவனம் செலுத்த வேண்டும் எனவும் வேட்பாளர்கள் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *