2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (18) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் பி. சாய் சுதர்சன் ஆகியோரின் அபாரமான – நிதானமான ஆட்டத்தினால் டெல்லி கேபிடல்ஸ் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இதன் மூலம் துடுப்பாட்டத்தில் அபாரமான திறமையுடன் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி, விக்கெட் இழப்பின்றி 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை துரத்திய முதல் அணியாக ஐ.பி.எல். வரலாற்றில் இடம்பிடித்தது.
நேற்றிரவு (18) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சாய் சுதர்சனும் ஷுப்மான் கில்லும் இணைந்து ஒரு வலுவான மற்றும் அசைக்க முடியாத கூட்டணியை உருவாக்கியதால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு விக்கெட் எடுப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லாது போனது.
வெறும் 19 ஓவர்களில் 205 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்த அவர்களின் சேஸிங், சுதர்சனின் 61 பந்துகளில் 108 ஓட்டங்கள் மற்றும் கில்லின் அற்புதமான 53 பந்துகளில் 93 ஓட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.
இவை இரண்டும் இந்த சீசனில் அவர்களின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகவும் அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் இடங்களை உறுதி செய்ய குஜராத் டைட்டன்ஸ் உதவியது.
அத்துடன், புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்த அவர்களும் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தனர்.
மறுபுறம், DC அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பானது இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, தங்கள் தகுதிச் சுற்றுக்கான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற GT அணியானது பந்து வீச்சினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய DC அணிக்கு கே.எல். ராகுல் 65 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை எடுத்து ஒரு அற்புதமான தொடக்கத்தை அளித்தார்.
அவரது இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்கள் இடம்பெற்றன.
இது இன்னிங்ஸின் முடிவில் DC அணிக்கு 3 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் என்ற வலுவான ஓட்டத்தை பெற உதவியது.
போட்டியின் ஆட்டநாயகனாக சாய் சுதர்சன் தெரிவானார்.