2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (19) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியானது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 6 விக்கெட்டுகளினால் தோற்கடித்தது.
இந்த தோல்வியின் மூலம் ரிஷப் பந்த் தலைமையிலான LSG அணியானது 2025 ஐ.பி.எல். பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியது.
அதேநேரம், பேட் கம்மின்ஸ் தலைமையிலான SRH அணியானது புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளைப் பெற்று 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல். தொடரின் 61 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய LSG அணி 7 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றது.
LSG அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் (65 ஓட்டம்) மற்றும் ஐசன் மார்க்ராம் (61 ஓட்டம்) ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
இரு வீரர்களின் அரைசதங்களின் உதவியுடன் தொடக்கத்தில் 115 ஓட்ட கூட்டணியை உருவாக்கினர்.
அது தவிர நிக்கோலஸ் பூரனின் 26 பந்துகளுக்கு 45 என்ற ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் அவர்கள் 205 என்ற சவாலான ஓட்டத்தை நோக்கி முன்னேறியது.
SRH அணி சார்பில் பந்து வீச்சில் இலங்கை நட்சத்திரம் எஷான் மலிங்க சிறப்பாக செயற்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து அறிமுக வீரர் ஹர்ஷ், ஹர்ஷல் படேல் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஐ.பி.எல். அரங்கில் 150 விக்கெட்டுகளை எட்டிய ஹர்ஷல் படேலுக்கு இது ஒரு சிறப்பான இரவாக அமைந்தது.
சேஸிங்கில் அபிஷேக் சர்மாவின் 18 பந்துகளில் அரைசதம், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அபாரமான ஆட்டம் SRH அணிக்கு வலுவான பங்களிப்பை வழங்கியது.
206 என்ற இலக்கினை துரத்திய அந்த அணியானது இறுதியாக 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தெரிவானார்.