மஹிந்த , கோட்டா தலைமையில் போர் வீரர்கள் தின நிகழ்வு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகே அமைந்துள்ள போர் வீரர் நினைவுச் சின்னத்துக்கு அருகில் இன்று காலை நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

“இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். ஆம், சமாதானத்துக்காகவே யுத்தம் செய்தோம்.

யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம்.

எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது. அது வரும் அரசுகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம். ஆனால், எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே.” – என்றார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி இதன்போது எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மஹிந்த, “தேசிய பாதுகாப்பு? அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டைப் பாதுகாக்க வேண்டும்…” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *