கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 புதிய வீடுகளுக்கான அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள்  இன்று முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் கனடா அமைப்பின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும்  செங்கலடியில் அமைக்கப்படவுள்ள 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

“உதவும் பொற்கரங்கள்”அமைப்பின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் வட அமெரிக்கா தமிழ் சங்கத்தின் உறுப்பினர் சிவம் வேலுப்பிள்ளை, கனடா விபுலானந்தர் கலைமன்றத்தின் தலைவர் வல். கந்தையா புருஷோத்தமன், சமூக செயற்பாட்டாளர் வி.விஜயராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மிகவும் வறிய நிலையில் தகர கொட்டில்களில் வாழும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் கனடா அமைப்பானது  கடந்த 12வருடமாக வடகிழக்கில் பல்வேறு சமூக நல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *