இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார்.
திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒப்பந்தத்தை தங்கள் உரிமைகளுக்கு துரோகம் செய்வதாகக் கருதுவதாக கூறி வழக்குத் தாக்குல் செய்துள்ளார்.
அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு வழங்கப்பட்ட உத்தரவில், “சாகோஸ் தீவுக்கூட்டம் என்றும் அழைக்கப்படும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க அரசாங்கம் எந்தவொரு உறுதியான அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது அல்லது அத்தகைய எந்தவொரு பரிமாற்றத்தின் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்று கூறுகிறது.
வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாகோசியர்கள் சாகோசிய தீவுகளின் முன்னாள் குடியிருப்பாளர்கள், அவர்கள் 1960களின் நடுப்பகுதிக்கும் 1970களின் முற்பகுதிக்கும் இடையில் தீவுகளிலிருந்து பெரும்பாலும் மொரீஷியஸுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தீவுகளில் பிறந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
ஆனால் பிரிட்டிஷ் எல்லைக்கு வெளியே பிறந்த அடுத்தடுத்த தலைமுறையினருக்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை.
இந்த நிலையில் அண்மைய ஆண்டுகளில், தீவுகளை மொரீஷியஸிடம் திருப்பித் தருமாறு இங்கிலாந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.