சீரற்ற காலநிலை; கிண்ணியாவில் உப்புச் செய்கை பாதிப்பு..!

கிண்ணியாவில் இந்த வருடம், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அவ்வப்போது பெய்த கடும் மழை காரணமாக, உப்புச் செய்கையை இன்னும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக,  உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேசத்தில், வில்வெளி, கச்சக்கொடிதீவு மற்றும் பொன்னவரந்தீவு ஆகிய பகுதிகளில் சுமார் 250கும் மேற்பட்ட ஏக்கர் உப்பு வயல்கள் காணப்படுகின்றன. 

இங்கு, மார்ச் மாதம் உப்புச் செய்கையை ஆரம்பித்து, மே மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் இறுதிவரை உப்பு அறுவடை நடைபெறுவது வழமையாகும்.

ஆனால், கடந்த இரு மாதங்களாக, உப்பு உற்பத்தியை முன்னெடுப்பதற்காக, மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், மழை காரணமாக இன்று வரை கைகூடாத நிலையிலே இருப்பதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது உப்பு வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றது.

இதனால் அந்த நிலங்களில், இருந்து நன்னீர் செறிவை, முழுமையாக இல்லாமல் செய்த பின்னரே, உப்பு செய்கையை முன்னெடுக்க முடியும்.

இந்த நிலையில் உப்பு வயல் நிலங்களை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கூட எடுக்கலாமென இவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

உப்பு வயல்களை நம்பி, வாழும் சுமார் 300 குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கச்சக்கொடித்தீவு சௌபாக்கிய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எம். ஏ. சதாத் தெரிவிக்கின்றார்.  

ஒவ்வொரு வருடமும், இவர்கள், பிரதேச சபைக்கு முறையாக வரி செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில், இவர்கள் பாதிப்புகளை சந்திக்கின்ற போது, அவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் அவர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *