
தமிழ் அரசியல்வாதிகள் குறிக்கோள் இல்லாதவர்கள். அவர்கள் தேசியம், இனம் சார்ந்து சிந்திக்கமாட்டார்கள் என புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் விசனம் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது சமூகத்தை நல்வழிப்படுத்த அரசியல் வேண்டும். எனவே தூய அரசியல் கட்டமைப்பை உருவாக்க நான் தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய அரசியலை நாம் இன்னமும் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையிலே நான் நிற்கும் போது தான் இந்த அரசியலை நான் பார்க்கின்றேன். நேரடியாகவே விமர்சிக்கின்றேன்.
எங்களுடைய அரசியல் சாக்கடை அரசியல்.அரசியல் தலைவர்கள் இங்கே குறிக்கோள் இல்லாதவர்கள்.தேசியம்,இனம் சார்ந்து சிந்திக்க கூடிய அரசியல்வாதிகள் இங்கே இல்லை. எல்லோருக்கும் பின்னாலே ஒரு தனி அரசியல் உண்டு.தூய அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அந்த கட்டமைப்பு மக்களுக்கு ஏற்பட்ட வடுக்களை,வலிகளை தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.அதற்காக நான் நேர்மையாக உழைக்கத் தயாராக உள்ளேன்.
அரசியல் எமக்கு வேண்டும்.சமூகத்தை நல்வழிப்படுத்த அரசியல் வேண்டும்.இப்போது உள்ள ,அரசியல் தலைவர்கள் அல்லது அரசியல் நிலைமைகள் இதை சீர் செய்யாது.
எப்போதும் தனிப்பட்ட ரீதியாக அரசியலுக்கு வருவதை பற்றி நான் சிந்தித்தது இல்லை.அது வெற்றிடமாகவே உள்ளது. அது நிரப்பப்படும் என்றார்.




