சீரற்ற காலநிலையால் காத்திருந்த மீனவர்களுக்கு அள்ளிக்கொடுத்த கடல் அன்னை!

காற்றின் வேகம் குறைவடைந்ததன் காரணமாக புத்தளம் – உடப்புப் பகுதியிலுள்ள கடற்கரையில் பல மீன்கள் கரையொதுங்கியதால் மீனவர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

புத்தளம்-உடப்பு பகுதியில் உள்ள கடற்கரையில் காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாக இன்று  (31) மீனவர்களின் ஒரிரு இயந்திரப் படகுகள் கடலுக்குச் சென்றன. 

கற்பாரையில் காணப்படும் விளமீன்கள் (பாசி மீன்)காற்றின் வேகத்தால் கரையைத் தேடி வருவதுண்டு.இது சுமார் மூன்று,நான்கு நாட்கள் மட்டுமே வலையில் படுவதுண்டு. இந்த நிலையில் இன்று குறைவடைந்த காற்றால் மீனவர்களின் வலையில் விளமீன்கள் அகப்பட்டன.  

அத்துடன்  ஓரா மீன்,சிறு ஊழி மீன்,வெள்ளத்தோலன்,குருவிழி ,பூனவராண்டி போன்ற மீன்களும் பிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டன. 

கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரிக்கப்பட்டதையடுத்து மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று காற்றின் வேகம் சற்றுக் குறைவடைந்ததால் ஓரிரு படகுகளை மீனவர்கள் கடலுக்கு  எடுத்துச் சென்றனர்.அதன்போது அவர்களுக்கு பல மீன்கள் கிடைக்கப்பெற்றன. 

அதனையடுத்து ஒரு கிலோ மீன் 500 ரூபாவுக்கும் மேலாக  விற்கப்பட்டது. இது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியது என்ற வகையில் தங்களது மகிழ்ச்சியை மீனவர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *