தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!

புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறுப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில்,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான திருமதி எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

இவை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும். 

மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

1987  ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம். 

குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாகாண சபையின் முக்கியமான பல அதிகாரங்களை மீளவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது, ஆளுந்தரப்பில்  பங்காளிகளாக இருந்த நாம், அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் பேசும் பிரதிநிதிகளையும் மாகாண சபை தொடர்பான நியாயத்தினை புரிந்து கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து சுமார் 50 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில்

 நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட. வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முனனெடுக்கப்பட்டன.

குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, 1000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம்  எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தினையே கைவிடச் செய்ததில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

இவ்வாறான பின்னணியிலேயே  தற்போது மன்னார் வைத்தியசாலை விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக மாகாண சபையை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளாத6 தரப்பினர் ஆளுந்தரப்பாக இருக்கின்ற நிலையில், எமது அரசியல் அபிலாசைளுக்கான அடிப்படையாக கொண்ட மாகாண சபை அதிகாரங்களை வலுவிழக்க செய்கின்ற, மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கி எடுக்கப்படுகின்ற அபாயம் அதிகளவில் இருக்கின்றது.  எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எமது மக்களின் நலன்சார்ந்த தரப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணில் எண்ணெய் ஊற்றி விடயங்களை அவதானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

அதேபோன்று, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது. 

இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற  போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.

அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.

எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளபை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *