இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றையதினம் அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன.
அதன்படி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்மாலி ஹேமச்சந்திர, ஓஷானி உமங்கா மற்றும் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார் , வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, பிரதமரைச் சந்தித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் சீன அரசாங்க சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் (இருதரப்பு), தர்ஷன எம். பெரேரா மற்றும் அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.