உக்ரைன் போரில் ரஷ்யா தோல்வி அடையும்: கனடா பிரதமர்

கனடா, மார்ச் 11

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.

ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் போரில் ரஷ்யா தோல்வி அடையும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக போரை தொடங்கிய பயங்கரமான தவறை செய்துள்ளார். இந்த போரில் அவர் தோல்வி அடைவார். தங்கள் பிரதேசத்தை பாதுகாக்க உக்ரேனிய மக்களின் மூர்க்கத்தனமும் வலிமையும் உறுதியும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது” என்றார்.

Leave a Reply